Monday 1 August 2011

பிரதோஷம்





சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது.
  • குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
  • வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
  • நோய்கள் நீங்கும்.
  • எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
 ஒவ்வொரு மாதமும், மாதமிருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.
பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும்.

பிரதோஷ வரலாறு

மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அந்த நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல்  அப்படியே போட்டுவிட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.
திருமால், பிரம்மன், மற்றும் தேவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் அந்த விஷத்தை சிவபெருமான் உட்கொண்டார். நடப்பதை கண்டு அஞ்சிய அன்னை பார்வதி ஒடிவந்து சிவனாரின் கண்டத்தையிருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட “நீலகண்டர்”-என திருப்பெயர்ப் பெறலானார் சிவபெருமான்.

11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

பிரதோஷ வகைகள்

நித்திய பிரதோஷம் - தினமும் பிரதோஷ நேரத்தில் அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவனை வணங்குவது.

பட்சப் பிரதோஷம் - சுக்லபட்ச சதுர்த்தி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பட்ச திரயோதசி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.

பிரளய பிரதோஷம் - உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கான பொருள்களும் பலன்களும்
    மலர்கள் - தெய்வ தரிசனம் கிடைக்கும்
    பழங்கள் - விளைச்சல் பெருகும்
    சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
    சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
    தேன் - இனிய சாரீரம் கிடைக்கும்
    பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
    எண்ணெய் – சுகவாழ்வு கிடைக்கும்
    இளநீர் - நல்ல மக்கட் பேறு கிடைக்கும்
    பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
    தயிர் - பல வளமும் உண்டாகும்
    நெய் - முக்தி பேறு கிடைக்கும்

பிரதோஷ காலத்தில் வலம் வரும் முறை

பிரதோஷ காலத்தில் திருக்கோவிலை சாதாரணமாக வலம் வருவதைப் போல வலம் வரக்கூடாது. மாறாக, சோம சூட்ச பிரதட்சண முறையில் தான் வலம் வர வேண்டும். அதாவது, சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு இடப்புறம் சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி, வந்த வழியே திரும்பி, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை சென்று மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இம்முறைக்கு சோம சூட்ச பிரதட்சணம் என்று பெயர்.



No comments:

Post a Comment