Tuesday 24 January 2012

சூரிய ஜெயந்தி

தை மாதத்தின் வளர்பிறை சப்தமி என்னும் ஏழாம் நாள் இரத சப்தமி என்றும் சூரிய ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகின்றது. சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த ஏழாம் நாளை, "சப்தமி திதி' என்கிறோம். சூரியனின் பிறந்தநாளை ரதசப்தமியாகக் கொண்டாடுகின்றனர்.

சூரியன் உதயமாகும் சமயத்தில், யாரொருவர் குளித்து, பணிகளுக்கு தயாராகி விடுகிறாரோ, அவர் ஏழையாக இருக்க மாட்டார் என்று சொல்கிறது சாஸ்திரம். ரதசப்தமி திருவிழாவின் தாத்பர்யமே அதுதான்.

உத்தராயண புண்ணிய காலம்

தைமாதம் முதல் நாள் முதல் ஆனி மாதம் நிறைவு நாள் வரையான காலம் உத்தராயணம் என்று அழைக்கப்படுகின்றது. கோவில் கும்பாபிஷேகம் முதலான புண்ணிய காரியங்களுக்கும். கல்யாணம் முதலிய சுப நிகழ்ச்சிகளுக்கும் உகந்த காலம். மறுமைப் பேறு, நற்கதி அடையவும் உகந்த காலம், வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருக்கும் காலம் என்பது ஐதீகம். உத்தராயணத்தின் முதல் நாள் மகர சங்கராந்தி தலை சிறந்த புண்ணிய நாள். யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத சபதம் செய்து காலம் முழுவதும் நைஷ்டிக பிரம்மச்சாரியாக வாழ்ந்த பீஷ்ம பிதாமகர், தம் தந்தை அளித்த வரத்தின் படி மோக்ஷம் பெற காத்திருந்த காலம் உத்தராயண புண்ணிய காலம்.

இரத சப்தமி

உத்தராயண புண்ணிய காலத்தின் முதல் மாதமான தை மாத வளர்பிறை ஏழாம் நாள் அதாவது சப்தமி சூரியனுக்கு உரிய இரத சப்தமி என்று கொண்டாடப் படுகின்றது.

இரத சப்தமியன்று அருணன் சாரதியாக இருந்து செலுத்தும் ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய நாராயணரின் இரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாள் என்பாரும் உண்டு. வெள்ளை ஒளியில் ஏழு நிறங்கள் அது போலவே சூரிய இரதத்தில் ஏழு குதிரைகள். எனவேதான் ஏழாம் நாள் என்பதால் சூரியனுக்கு உரிய நாளாக அமைத்தனரோ முன்னோர். இரத சப்தமி என்னும் இந்நாளில் சூரியனுக்கு விசேஷ ஓளி பிறப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

இரதத்தை எப்படி செழுமையாக செலுத்த வேண்டுமோ அது போல ஐம்புலன்களால் பல் வேறு திசைகளில் இழுக்கப்பட்டு தடுமாறும் மனத்தை இறைவனிடம் செழுத்தவேண்டும் என்பதை உணர்த்தும் நாள் இரத சப்தமி நாள்.

எருக்கம் இலை

தலையில் ஏழு எருக்கம் இலைகள் வைத்து குளிக்கும் நாள். இவ்வாறு சூரிய ஒளி நம் மேல் பட நீர் நிலைகளில் குளிப்பது ஞானம் பெற இது உதவுதாக ஐதீகம். பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்து உத்தராயண காலத்திற்கு காத்துக் கொண்டு இருந்த போது வியாசர் அங்கே வர, தான் இவ்வாறு அம்பு படுக்கையில் கிடந்து அல்லல் படுவதற்கான காரணத்தை வினவ. வியாசர் பதிலிறுக்கின்றார், துரியோதனன் சபையில் பாஞ்சாலியை அவமானப்படுத்த துச்சாதானன் முயன்ற போது பிரம்ம்ச்சரிய விரதம் பூண்ட நீதிமானான தாங்கள் தடுக்காததால் ஏற்பட்ட பாவத்திற்க்கான தண்டனை இது என்றார். ஆம் என்று ஆமோதித்த கங்கை மைந்தர் என்ன்டைய தேகத்தை சூரிய கதிரினால் எரித்து சுத்தம் செய்யுங்கள் என்று வேண்ட எருக்கம் இலைகளால் உடல் முழுவதும் தடவி சுத்தம் செய்தார் வியாசர்.

எருக்கம் இலை அர்க்க பத்திரம் என்று அறியப்படுகின்றது. அருக்கன் என்றால் சூரியன். எருக்கம் இலையில் சூரியனின் சாரம் உள்ளது. எனவேதான் சந்திரனை ஜடாமுடியில் தாங்கும் சிவ பெருமான் எருக்கை சூரியனாக அணிகின்றார்.

ஏழு சுரங்கள் கொண்ட இசை எவ்வாறு மனதை ஒருமைப்படுத்துகின்றதோ அது போல ஏழு நிறங்களால் ஆன சூரியனின் கிரணங்களை எருக்கம் இலை ஈர்த்து மனதை ஒருமைப்படுத்துகின்றது, எனவே இறைவன் திருவடியில் ஒன்றலாம் என்பதை உணர்த்தும் நாள்.

சூரிய நாராயணர்

சகல ஜீவராசிகளையும் தன் ஒளிக் கதிரால் வாழ்விப்பவன் சூரியன், அது போல சகல ஜீவராசிகளையும் காப்பவர் நாராயணன். எனவே சூரியனுக்கும் விஷ்ணுவுக்கும் வித்தியாசம் இல்லை. எனவே சூரிய பகவான் சூரிய நாராயணன் என்றும் அழைக்கப்படுகின்றார். இவ்வாறு அழைக்கபப்டுவதற்கு ஒரு காரணமும் உண்டு பெருமாளின் வாகனம் வேத சொரூபி கருடன். கருடன் சிறந்த அழகு பொருந்திய சிறகுகளை உடையவன் ஆதலால் கருத்மான் என்றும் அழைக்கப் படுகின்றான். கருடனுடைய இரு சிறகுகள் உத்திராயணம் மற்றும் தக்ஷிணாயனம் ஆகும். அவன் பறக்கும் போது பகலும் இரவும் மாறி மாறி உண்டாகிறது. இவ்வாறு கால புருஷனை நடத்துபவர் விஷ்ணு. இவர் கருட வாகனத்தில் வருவதால் சூரியன் சூரிய நாராயணன் என்றும் அழைக்கப் படுகின்றார். எனவே தான் விஷ்ணுவுக்குரிய சங்கும் சக்கரமும் ஏந்தி சூரியனும் அருள் பாலிக்கின்றார். சூரியனும் வேத சொரூபம் காலையில் ரிக் வேதமாகவும், நன்பகலில் யஜுர் வேதமாகவும், மாலையில் சாம வேதமாகவும் ஒளிர்கின்றார் சூரிய நாராயணர்.

Thursday 12 January 2012

தைப்பூசம்

27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும். இத்தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். பார்வதி தேவி பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கிது தைப்பூச நாளில் தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால் தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர்.

தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தளங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.

தைப்பூச விரதமுறை : 

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம், சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

தை அமாவாசை

இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம்வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூசை செய்வர்.

 கடல்கூடும் கன்னியாகுமரி, இராமேசுவரம் மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும்.

அமாவாசையன்று தோன்றிய முழு நிலவு

திருக்கடையூரில் வசித்த சுப்பிரமணியன் என்ற பக்தர் அபிராமி அம்மனின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். நிலா போல ஒளித்தன்மை கொண்ட அம்பிகையின் முக அழகில் எப்போதும் லயித்திருப்பார். ஒருசமயம், அவர் அம்பிகையை தரிசித்துக் கொண்டிருந்தபோது, சரபோஜி மன்னர் அங்கு வந்தார். அவரைக் கவனிக்காத சுப்பிரமணியன், மன்னருக்குரிய மரியாதையை செய்யவில்லை. கோபம் கொண்ட மன்னர், அவர் அருகில் சென்று இன்று என்ன திதி? என்று கேட்டார். அன்னையின் முழுநிலவு போன்ற திருமுகத்தையே மனக்கண்ணால் கண்டுகொண்டிருந்த அவர், தை அமாவாசையைப் பௌர்ணமி திதி என்று சொல்லிவிட்டார். . உடனே அரசன் அது "மதி கெட்ட தினம்" ( சந்திரன் தோன்றாத தினம் அதாவது அமாவாசை, சுப்ரமணியருக்கு அறிவு கெட்ட தினம்) என்று பட்டரை நோக்கி சிலேடையாகக் கூறி இன்று நீர் முழு நிலவை காட்டக் கூடுமோ? என்றார். பட்டரும் அதற்கு உடன்பட்டார். பட்டரின் இந்த கூற்றினால் கோபம் கொண்ட மன்னன் இன்று இரவு முழு நிலவு தோன்றவில்லை என்றால் உமக்கு சிரச்சேதம் என்று கட்டளையிட்டார். அன்னையின் அருளின் மேல் முழு நம்பிக்கை கொண்டிருந்த பட்டர் அசரவில்லை.

திருக்கடவூர் இறைவியாகிய அபிராமியின் அருள் விளையாடலோ அதியற்புதமான விளையாடல். தன்னையே, தான் வேறு தன் பக்தன் வேறல்ல என்று உலகுக்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டாள். அரசரின் கட்டளைப்படி சிறையிலிருந்து அக்னி குண்டம் அமைத்து அதன் மேல் நிறுவிய சங்கிலித் தொடரில் 100 பலகைகள் கொண்ட ஊஞ்சலை அமைத்து அதில்  அமர்ந்து அபிராமி அந்தாதியை கள்ள வாரண பிள்ளையாரைக் காப்புக்கு அழைத்து  துவக்கினார் . ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒரு கயறு சிப்பாய்கள் அறுத்தனர் . 100வது பாடல் முடிந்ததும் நிலவு வராவிட்டால், நூறு கயரும் அரக்கப் படும். பட்டரும் அடியில் எரியும் தீயில் விழுந்து உயிரை இழக்க வேண்டும். அந்தாதியாவது நூலின் ஒவ்வொரு பாடலிலும் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சொல், சீர், அடி ஆகிய இவற்றுள் யாதேனும் ஒன்று அதற்கு அடுத்த பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடி, இறுதிப் பாடலின் முடிவும் முதற்பாடலின் தொடக்கமும் ஒன்றாக இணையும்படி மண்டலத்து மாலை போலத் தொடுத்துப் பாடப்பெறும் ஒருவகைச் சிற்றியலக்கியமாகும். உதாரணமாக இந்த அபிராமி அந்தாதியில் 100-வது பாடலானது 'குழையைத் தழுவிய' என்று ஆரம்பித்து 'நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே' என முடிகிறது. அபிராமி அந்தாதியின் முதல் பாடலோ 'உதிக்கின்ற' என ஆரம்பிக்கிறது. மன்னர் அவரிடம் இன்று பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் தண்டனைக்கு ஆளாக நேரிடும்! என எச்சரித்துச் சென்றுவிட்டார். அபிராமி அம்பிகை மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட சுப்பிரமணியன் அமாவாசை தினமான அன்று நிலா உதிக்க வேண்டும் என வேண்டி, அம்பிகையின் புகழைச் சிறப்பித்து நூறு பாடல்கள் பாடினார். அதுவே அபிராமி அந்தாதி என்னும் அற்புதமான பொக்கிஷ நூலாகும். அவரது பாடலில் லயித்த அம்பிகை, நிலவை ஒளிரச் செய்து, அவரது பக்தியை உலகம் உணரச் செய்தாள். மேலும் தனது பெயராலேயே, அவர் அழைக்கும்படியாகவும் அருள்புரிந்தாள். இதனால் அவர் அபிராமி பட்டர் என்று பெயர் பெற்றார். அமாவாசையை பவுர்ணமியாக்கிய வைபவம் ஒவ்வொரு தை அமாவாசை அன்றும் திருக்கடையூரில் நடக்கும்.

தை மாதம்

தை மாதம் என்பது சக்தி வாய்ந்தது. இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள். மகரத்திற்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். 

ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் என்பதை அறிவோம். அதில், தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரை உத்தராயனம் என்றும், ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரை தக்ஷிணாயனம் என்றும் பிரித்து அருளியிருக்கிறார்கள் ரிஷிகள்!  உத்தராயன காலம் துவங்குகிற இந்தத் தை மாதத்தைப் போற்றும் வகையில் சொல்லப் பட்ட வாசகம்... தை பிறந்தால் வழி பிறக்கும்! உத்தராயன காலத்தை தேவர்களின் பகல் பொழுது என்றும், தக்ஷிணாயன காலத்தை தேவர்களின் இரவுப் பொழுது என்றும் சொல்வர்.

பொங்கல்

தைப்பொங்கல்

தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

காணும் பொங்கல்

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா. காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

போகிப் பண்டிகை

தீபாவளியைப் போலவே பொங்கலும் கண்ணபிரான் தொடர்புடைய பண்டிகையே!

இந்திரனுக்கு `போகி' என்ற பெயரும் உண்டு. மழையைப் பெய்யவைக்கும் இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தை முதல் நாள் புதுப் பயிரைப் படைத்து ஆராதிக்கும் பழக்கம் நிலவி வந்தது.

கிருஷ்ண அவதாரத்தின்போது கிருஷ்ண ர், அந்தப் படையலை நாராயணனின் அம்சமான சூரியநாராயணனுக்குப் படைக்கும்படி கட்டளையிட்டார். அதனால் கோபம் கொண்ட இந்திரன், பெரும் மழை பெய்யச் செய்தான். மக்கள் நிலை குலைந்து தவித்தனர். மாடுகள், கன்றுகளைத் தொலைத்துக் கதறின. அபயம் அளித்து கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மக்களைக் காப்பாற்றினார், கிருஷ்ணன். அன்று முதல் கண்ணபிரான் ஆணையின்படி மக்கள் சூர்ய பூஜை செய்ய ஆரம்பித்தனர். அதுவே பொங்கல் திருநாள்.
இதனால் வெட்கமடைந்த இந்திரன், இறைவனை வேண்ட, இறைவன் சங்கராந்திக்கு முன்னால் அவன் பெயரில் போகிப் பண்டிகை கொண்டாடப் பணித்தார்.

காளிங்க மடுவில் குதித்த கண்ணனுக்கு காளிங்கனின் விஷம் ஏறாதபடி ஆயர்பாடிச் சிறுவர்கள் தீ மூட்டி, பறை கொட்டி இரவு முழுவதும் விழித்திருந்தனர். அதன் காரணமாகவே போகியன்று பறைகொட்டும் வழக்கம் உண்டாயிற்று.

ஆருத்ரா தரிசனம்


” நாளெல்லாம் திருநாளாகும்; நடையெல்லாம் நாட்டியமாகும்... “ எனும் கவிதை வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தாண்டவமாடி அசுரன் அபஸ்மரனை ஒரு காலால் மிதித்து வதம் செய்து இன்னொரு காலை தூக்கி வைத்து நடனமாடிக் காட்சித் தந்து கொண்டிருக்கும் தில்லையம்பல நடராஜருக்கு இவ்வார்த்தைகள் தகும். திருநாளில் தானே நாட்டியம் களைக்கட்டும். எப்பொழுதுமே நடனமாடிக் கொண்டிருக்கும் சிவப்பெருமானுக்கு என்றுமே திருவிழாதான். இருப்பினும் சிவாலயங்களில் மிகமுக்கியமானது ஆருத்ரா தரிசனம். கைலாய மலையில் வீற்றிருக்கும் சிவப்பெருமானுக்கு பிரியமான பனிமழைப் பெய்யும் மார்கழி மாதமும் அவருக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரமும் இணையும் சுபவேளைதான் ஆருத்ரா தரிசனம்.


அந்த காலத்தில் சில முனிவர்கள் கூட “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை”  என நாத்திகம் பேசி வந்தனர். அவர்களது அறியாமையை நீக்கிட வந்த சிவப்பெருமான் தனக்கு எதிராக ஏவிவிடப்பட்ட யானையை தனது ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகப் பூண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழி திருவாதிரை.

நடராஜரின் வலது கால், முயலகன் என்பவன் மீது இருக்கிறது. இவனை, "அபஸ்மாரன்' என்பர். இவன் வளைந்து நெளிந்து, அஷ்ட கோணலாகப் படுத்திருப்பான். "அபஸ்மாரம்' என்றால், "வளைந்து நெளிதல்' என்பர். காக்கா வலிப்பு நோய் வந்தவருக்கு, கையும், காலும் இழுத்து, எந்த நிலையில் தரையில் கிடப்பாரோ, அப்படி ஒரு நிலை. "முசலகம்' என்றால், "காக்கா வலிப்பு!' இதனால், அவன், "முசலகன்' என்றாகி, தமிழில் முயலகன் ஆனான். முயலகன், ஆணவத்தைக் குறிப்பவன். மனிதனுக்கு, தன்னிடமுள்ள அகங்காரத்தை, நடராஜர், காலில் இட்டு மிதித்திருப்பது போல், தனக்குள் புதைத்துக் கொள்ள வேண்டும். அதை, வெளியே காட்ட அனுமதிக்கவே கூடாது என்பது இதன் தத்துவம். இடது காலை, "குஞ்சிதபாதம்' என்பர். "குஞ்சிதம்' என்றால், "வளைந்து தொங்குதல்' எனப் பொருள். ஆம்... அவரது இடது கால் வளைந்து தொங்குகிறது.

திருவாதிரை களி
 
சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்னரே, தான் உணவருந்துவார்.


ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின; அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் வந்தடைந்தார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.


மறுநாள் காலையில் வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.


எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.


சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.